நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொறியியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.
முப்படைப் பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவி பெறப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் உந்து நிலையங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன
தற்போது திஸ்ஸமஹாராம, கதிர்காமம், பதுளை, பண்டாரவளை, வெலிமடை, அம்பாறை ஆகிய பகுதிகளிலும் வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலு்ம நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
எனினும், காலி, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நீர் விநியோகம் 100 சதவீதமாக மீளமைக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள அம்பத்தலை, லபுகம போன்ற முக்கிய நீர் மூலங்களுக்குச் சேதமில்லை எனவும், களனி கங்கையின் வெள்ள அபாயம் தணிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தடைப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு தாங்கி ஊர்திகள் மூலம் நீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்குள் 100 சதவீத நீர் விநியோகத்தை மீள வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













