இத்தாலிக்கு வீட்டுப் பணியாளராகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் 21 வருடங்கள் சிறைத் தண்டனை எதிர் கொண்டுள்ளார். ரோம் நகரில் வீடு ஒன்றில் முதியவரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான Nawela Kevinda அந்த முதியவரைக் கொலை செய்துள்ளார். பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டமைக்காக முதியவரை மிகக் கொடூரமாக அடித்து அவர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் 94 வயதான Nicolò Caronia எனும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி ஆவார். உயிரிழந்தவர் இத்தாலியப் பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர். 2022ம் ஆணடு யூன் மாதம் 2ம் திகதி நடந்த இச் சம்பவத்தின் போது நிக்கோலா கரோனியா ஒரு கோப்பி தருமாறு தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார். எனினும் குறித்த பெண் மது போதையில் இருந்தமையினால் கோப்பி வழங்க மறுத்து தகராறு செய்துள்ளார்.
மனமுடைந்த முதியவர் தானே எழுந்து கோப்பி போட முயன்ற போது ஆத்திரமடைந்த இலங்கைப் பெண் அவரைத் தாக்கியுள்ளார். கைகள், முழங்கைகள் மற்றும் கால்களால் முதியவரின் தலை மற்றும் முகம் என உடல் முழுவதும் பலமாகத் தாக்கியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுடன் நில்லாமல் அந்தப் பணியாளர் அந்த முன்னாள் அதிகாரியின் வீட்டில் இருந்த பொலிஸ் கௌரவச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் மீது துப்பி அவமரியாதை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் முதியவரைப் படுக்கையில் தள்ளிய நிலையில் தனது அறைக்குச் சென்றுள்ளார். நிக்கோலாவின் மகன் பேப்றிசியோ தனது தந்தையைத் தொலைபேசியில் அழைக்க முயன்ற போது பலமுறை பதில் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பணியாளர் பதிலளித்த போது பின்னணியில் தனது தந்தை வலியால் முனகுவதைக் கேட்டு சந்தேகமடைந்த மகன் உடனடியாக வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்று பார்த்த போது தந்தை மிக மோசமான நிலையில் காணப்பட்டுள்ளார். சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய நிக்கலோ ஓகஸ்ட் 27ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் திட்டமிட்ட கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரோம் நீதிமன்றம் குற்றவாளியான இலங்கைப் பெண்ணான நவேலாகேவிட்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













