விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளுடன் இணைந்து வங்கிப் பணத்தை அபகரிக்க முயன்றதாக மேரி ஃபிரான்சிஸ்கா என்ற இலங்கை பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் செயல்படாத வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 42 கோடி ரூபாய் பணத்தை எடுப்பதற்காக போலி ஆவணங்களை மேரி ஃபிரான்சிஸ்கா தயாரித்தார் என்பது குற்றச்சாட்டு.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மேரி ஃபிரான்சிஸ்காவின் வழக்கறிஞர்கள் மறுக்கின்றனர். என்ன நடந்தது?
எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டிருப்பது என்ன?
சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மேரி ஃபிரான்சிஸ்கா என்ற 45 வயது இலங்கைப் பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆனால், விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற பணியகத்தின் அதிகாரி (Bureau of Immigration) சதாசிவம், மேரி ஃபிரான்சிஸ்கா குறித்து சில தகவல்களை சென்னை கியூ பிரிவு போலீஸிடம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்கு மேரி ஃபிரான்சிஸ்கா திட்டமிட்டிருந்ததாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, இலங்கை பாஸ்போர்ட்டின் அசல் ஆவணம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் குடியேற்ற பணியக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த ஒருவர், முறைகேடான வழியில் இந்திய அரசின் ஆவணங்களை வைத்திருந்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த தகவலை சென்னை கியூ பிரிவு சிஐடி காவல் ஆய்வாளர் வேலவனிடம் குடியேற்ற அதிகாரி சதாசிவம் தெரிவித்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே தகவல், தமிழ்நாடு அரசின் அரசிதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.
2021-ல் மேரி ஃபிரான்சிஸ்கா கைது
“இலங்கையைச் சேர்ந்த மேரி ஃபிரான்சிஸ்கா, இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணா நகரில் தங்கியுள்ளார். அவரின் சுற்றுலா விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவில் வசிப்பதற்கான ஆதாரங்களை முறைகேடாக பெற்றுள்ளார்” என்று கியூ பிரிவு சி.ஐ.டி குற்றம் சுமத்தியது.
இந்த வழக்கில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி மேரி ஃபிரான்சிஸ்காவை கைது செய்து நீதிமன்றக் காவலில் கியூ பிரிவு சி.ஐ.டி போலீஸ் அடைத்துள்ளது.
காவல்துறையில் மேரி ஃபிரான்சிஸ்கா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 7 பேர் வெவ்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
’42 கோடி ரூபாயை சட்டவிரோதமாக எடுக்க திட்டம்’
காவல்துறை நடத்திய விசாரணையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான பாலைய்யா, உமாகாந்தன் ஆகியோருடன் இணைந்து மேரி ஃபிரான்சிஸ்கா குற்றச்செயலில் ஈடுபட்டதாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது.
இவர்கள் இந்தியா வந்ததற்கான பின்னணி குறித்தும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் ஹமீதா ஏ லால்ஜி, அர்ஷியா ஏ லால்ஜி மற்றும் இஸ்கந்தர் ஏ லால்ஜி (Iskander-A-Laljee) ஆகியோரின் செயல்படாத வங்கிக் கணக்குகளில் (Inoperative bank accounts) இருந்து 42 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 172 ரூபாயை மோசடியாக எடுக்க முயற்சித்ததாக கியூ பிரிவு சிஐடி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்கவும் அந்த அமைப்பை ஒருங்கிணைப்பதற்காகவும் இந்த பணத்தை எடுக்க முயன்றதாக கியூ பிரிவு சி.ஐ.டி கூறுகிறது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













