சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
தங்கத்தையோ, பணத்தையோ அல்லது பெறுமதிமிக்க பொருட்களையோ அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், ‘போதும், போதும்’ என ஒருவரும் சொல்லாது வாங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால், அறுசுவை உணவை அவர்களுக்கு அள்ளி வழங்கினால், ஒரு கட்டத்தில் ‘போதும், போதும்’ என்று விடுவார்கள். ஏனெனில், ஒரு சாண் வயிறு நிரம்பி வழிந்துவிடும். அதன் பின் அவர்களால் சாப்பிட முடியாது. இதுதான் உண்மை.
பசி வந்தால் மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு (நல்ல புத்தி), தானம் (பிறருக்குத் தருதல்), தவம், முயற்சி, தாளாண்மை, காமம் என்ற பத்தும் பறந்து போகும் என்பதை ‘நல்வழி’யில் ஔவையார் பாடலாகச் சொல்லியுள்ளார்.
“மானங் குலங்கல்வி வண்மை யறிவுடைமை
தானந் தவமுயற்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்துங்
பசிவந்தாற் பறந்து போம்.”
பசி உண்மையில் ஒருவரை நிலைகுலைய வைத்துவிடும். அதுவும் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற நினைப்பில் பணம் செலுத்திச் சென்ற ஒருவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால், உண்மையில் தன்னிலை மறப்பார்கள்.
நானும் இவ்வாறு வீட்டில் மாத்திரம் அடிக்கடி தன்னிலை மறப்பது வழமை. ஒரு நாள் முழுவதும் சாப்பிடாது இருப்பேன். ஆனால், ‘இன்று 12 மணிக்குச் சாப்பாடு கிடைக்கும்’ என நினைத்து வீட்டுக்குப் போகும் போது, சாப்பாடு தயாராகவில்லை எனின் எனது மூளை எனது கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கிவிடும்.
இவ்வாறான நிலையே ‘றீச்சா’வுக்குச் சென்ற ஒரு யுவதிக்கும் நடந்துள்ளது. அந்த யுவதி தன்னிலை மறந்து கூறும் விடயங்கள் உண்மைதான். எனக்கும் அந்த நிலை வந்திருந்தால் கத்தியிருப்பேன். மூவாயிரம் ரூபாய் கொடுத்துச் சாப்பிடச் சென்ற யுவதிக்குப் பலகாரம் கொடுக்கும் பேப்பர் தட்டில் ஒரு சிறு தொதல் துண்டைக் கொடுத்தால் எவ்வளவு கோபம் வரும் என்பது சொல்லித் தெரிவதில்லை.
ஔவைப் பாட்டிக்குக் கூட ஒரு தடவை இந்த நிலை ஏற்பட்டது.
பாண்டிய மன்னனான ‘வழுதி’ என்பவனின் அரண்மனையில் பிரம்மாண்டமான திருமணம் ஒன்று நடைபெற்றது. நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள், புலவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழ் மூதாட்டி ஔவையாரும் அந்தத் திருமண விருந்தில் பசியாறலாம் என்று சென்றார்.
ஆனால், கல்யாண மண்டபத்தின் அருகில் இருந்த சாப்பாட்டுக் கூடாரத்தில் தாங்க முடியாத கூட்டம்! அரச குடும்பத்தினர் மற்றும் பணக்காரர்களின் ஆரவாரத்தில், எளிய தோற்றத்துடன் வந்த ஔவையாரைக் கவனிக்க ஆளில்லை. கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார் பாட்டி. பலர் நெரிசலில் பாட்டியை நசுக்கினர். பலர் முழங்கையால் தவறுதலாகப் பாட்டியைக் குத்தினார்கள். பாட்டிக்கு ஒரு பிடி சோறு கூடக் கிடைக்கவில்லை. பசியோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
நொந்து நூலாகிச் சாப்பாட்டுக் கூடத்தை விட்டு வெளியே வந்த பாட்டியைப் பார்த்த மன்னன், ஓடிச் சென்று பாட்டியை அன்புடன் அணைத்தான்.
“பாட்டி, கல்யாணச் சாப்பாடு எப்படி இருந்தது? நன்றாக விருந்து உண்டாயா?” எனக் கேட்டான் மன்னன்.
உடனே பாட்டி, “ஆமாம் மன்னா! நான் மூன்று ‘உண்டேன்’, ஆனால் சோறுதான் உண்ணவில்லை!” என்றார்.
மன்னனுக்குப் புரியவில்லை. “என்ன பாட்டி சொல்கின்றாய்?” எனக் கேட்டான் மன்னன்.
அதற்குப் பாட்டி பாடிய பாடல்தான் இது:
“வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – நெருக்குண்டேன்;
தள்ளுண்டேன்; நீள்பசியால் வயிறு சுருக்குண்டேன்;
சோறுண்டிலேன்!”
எனத் தனது விரக்தியைப் பாடலாகப் பகிர்ந்தார்.
ஆகவே, அந்த யுவதி மட்டுமல்ல, ஔவையாரும் சாப்பாடு கிடைக்காத விரக்தியில் விம்மியவர்தான்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.















