கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை தொடர்ச்சியாக திருடி வந்த கணவன் மற்றும் மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகரின் வழிகாட்டலிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அங்கம்மனின் ஆலோசனையின்படியும், கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் பஸ்நாயக்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் ஏக்கநாயக்க வழங்கிய தகவலின் அடிப்படையில், விநாயகபுரம் பகுதியில் வைத்து 24 வயதுடைய கணவரும் 20 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கிளிநொச்சி உதயநகர், அம்பாள்குளம், விநாயகபுரம், சாந்தபுரம் மற்றும் கனகாம்பிகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 09 வீடுகளுக்குள் பகல் நேரங்களில் புகுந்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட 10 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் தொலைபேசிகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பல பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














